districts

img

நல்லூர் சுங்கச்சாவடியை உடனே மூடுக!

திருவள்ளூர், பிப். 6- சட்ட விரோதமாக கட்டணம் வசூலிக்கப்பட்டும் நல்லூர் சுங்கச்சாவடி செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த சுங்கச்சாவடியை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

செங்குன்றம் அருகே நல்லூரில் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (பிப்.6)  சாலை மறியல் நடைபெற்றது. இதில்  ஈடுபட்ட  25 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லக் கூடிய மிக முக்கிய சாலை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையாகும். சென்னையிலிருந்து மாதவரம், செங்குன்றம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திராவிற்கு செல்லும் இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. 

 சென்னை மாதவரம் முதல் ஆந்திர மாநிலம் தடா வரையில் 43 கி.மீ தூரமுள்ள சாலையை புணரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த சாலை வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம் செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கிறது. 2009ஆம் ஆண்டு மாதவரம் முதல் தடா வரையில் 6 வழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்ட நிலையில் முழுமையாக 6 வழிச்சாலை முடிவடையாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை கெடுபிடி 
இந்த நிலையில்  கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் செவ்வாயன்று (பிப். 6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நல்லூர் சுங்கச்சாவடி அருகில் கூடினர்.   காவல்துறை காலையிலிருந்தே கெடுபிடியாக நடந்து கொண்டனர். பின்னர் தடுப்புகளை ஏற்படுத்தி அதற்குள்ளாக பேசி கொள்ளுங்கள் என ஏராளமான காவல்துறையினரை அங்கு குவித்தனர். போராட்டம் துவங்கி சிறிது நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுப்புகளை தாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு,  சாலை மறியலும் ஈடுபட்டனர். 

இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், இ.மோகனா, சி.பெருமாள், ஆர்.தமிழ்அரசு, வட்டச் செயலாளர்கள் ஜி.வி.எல்லையன் (சோழவரம்), ஏ.ஜி.கண்ணன் (ஊத்துக்கோட்டை), இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), எஸ்.இ.சேகர் (பொன்னேரி), இ.ஜெயவேல் (மீஞ்சூர்), உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.