திருவள்ளூர், ஜூலை 25- மாதர் சங்கத்தின் சார்பில் நிதியைத் திரட்டி, திருநின்றவூர் நகராட்சி சாலையை சீரமைக்கும் போராட்டம் வியாழனன்று (ஜூலை 25), நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை (ஏஞ்சல் பள்ளி அருகில்), செல்லும் சிமெண்ட் சாலை 50 மீட்டர் தூரம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை என்பதால் குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கி குளங்களாக உள்ளதால் எங்கு பள்ளங்கள் உள்ளன என தெரியாமல் ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன.மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் என பலர் இந்த சாலையில் செல்லும் போது விழுந்து எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்வதால், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் பல முறை மனுக்கள் கொடுத்து எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மணல், சிமெண்ட், ஜல்லி திரட்டி சாலை அமைத்த மாதர் சங்கம்
இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பொது மக்களிடம் நிதியை திரட்டி மணல், சிமெண்ட், ஜல்லி ஆகியவற்றை கொண்டு வந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை ஜல்லி கலவையை கொண்டு சீரமைக்கும் பணியை வியாழனன்று (ஜூலை 25), காலையில் மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு இப்பணியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாமதமாக வந்த நகராட்சி அதிகாரிகளை பொது மக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இன்னும் 15 நாட்களுக்குள் சாலையை சீரமைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.
இப்போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் பூந்தமல்லி ஒன்றிய தலைவர் பவுர்ணமி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் தலைவர் இ.மோகனா, பகுதி நிர்வாகிகள் மாதர் சங்க நிர்வாகிகள் சரிதா, சங்கீதா, செல்வி , திலகா, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராபர்ட் எபிநேசர், மாவட்ட குழு உறுப்பினர் பச்சையம்மாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு நிர்வாகிகள் விஜயகுமார், நித்தியானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.