districts

img

பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் 3வது கட்ட அகழாய்வு துவக்கம்

திருவள்ளூர்,ஏப் 6- திருவள்ளுர் வட்டம், பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் மூலம் கற்காலம் முதற்கொண்டு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொல்பொருள்கள் கண்டறியப்பட்டது.   தொடர்ந்து, இவ்விடத்தின் தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வியாழனன்று (ஏப்-6), தொல்லியல் துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இவ்விடத்தில் மூன்றாம் கட்டமாக விரிவான அகழாய்வு பணி மேற்கொள்ளும் பொருட்டு காணொளி காட்சி வாயிலாக விரிவான அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவ் வகழாய்வு நடைபெறும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அகழாய்வு குழுவினருடன் இணைந்து பணிகளை மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம்  அவர்கூறியதாவது ;  தமிழ்நாட்டில் கீழடி, திருவண்ணாமலை முதலான பகுதிகளில் திருவள்ளுர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் வியாழனன்று (ஏப்.6)   மூன்றாவது கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வு ஏற்கனவே 2015-2016 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தொல்லியல் துறையில் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இதில், 1,404 தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

இவை கற்காலம் முதற்கொண்டு வரலாற்று தொடக்க கால வரையிலான பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவ்வகழாய்வின் முக்கிய கண்டு பிடிப்பாக செங்கற்கலால் கட்டப்பட்ட வட்டவடிவ கிணறு கிடைக்கப்பபெற்றது.  தமிழ்நாடு தொல்லியல் வரலாற்றில் சங்க காலத்தைச் சார்ந்த செங்கற்கலால் கட்டப்பட்ட மிகப்பெரிய அளவிலான சுமார் 3.91 மீட்டர் ஆழம் கொண்டது இக்கிணறு. சரிவக வடிவம் கொண்டு செங்கற்கலால் கட்டப்பட்ட இக்கிணறு 56 வரிசைகளை கொண்டு கட்டுமானப்பணிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கி.மு.3-4 நூற்றாண்டுகளில் வீட்டில் பயன்படுத்தப்பட்ட பழைய உபகரணங்கள் முதலான நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.  அதனையடுத்து ஏற்கனவே இரண்டு சிறிய அகழ்வாராய்ச்சி நடந்தபோது இந்த அளவுக்கு பல்வேறு பழைய கட்டுமானங்களோடு அடையாளம் காணப்பட்டது. தற்போது விரிவான அகழ்வாராய்ச்சி என்பது ஒரு பழைய அளவிலான அகழ்வாராய்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான அகழ்வாராய்ச்சி என்பது கிட்டதட்ட 25 நபர்கள் தினசரி என்ற முறையில் செப்டம்பர் வரை நடைபெறவுள்ளது.  ஏற்கனவே,  திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு இடங்களில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு, நமக்கு பல்வேறு பழைய காலங்களில் இருக்கக்கூடிய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சியாக அமைய வாய்ப்புண்டு என்று ஆட்சியர் கூறினார். இந்நிகழ்வுகளில், தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் முனைவர்.ஜே.பாஸ்கர், தொல்லியல் அலுவலர் முனைவர்.சுரேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள், திருவள்ளுர் வட்டாட்சியர் மதியழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.