திருவண்ணாமலை, நவ. 14- பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் திங்களன்று (நவ. 14) நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குநர் தனகீர்த்தி தொடங்கி வைத்தார். என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்படவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாநாந்திர உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை பயிற்சி வழங்கும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம், அரசு போக்குவரத்துக் கழகம், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆவடி கனரக தொழிற்சாலை, ஓசூர் அசோக்லேலண்ட் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 300க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்தன. இதில் அப்ரண்டீஸ் பயிற்சி மையத்தின் மண்டல இயக்குநர் புருஷோத்தமன், அரசு ஐடிஐ முதல்வர் கே.ரவி, பயிற்சி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.