districts

img

நேர்முக தேர்வு ரத்து: இளைஞர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, ஏப். 29- கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற இருந்த உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்ட கால்நடை மருத்துவமனை முன்பு 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு நூற்றுக்கணக்கானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ப.முருகேஷ் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருந்தார் இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப். 29)  காலை திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்பு மருத்துவமனை முன்பு சுமார் 300க்கும் மேற்பட்டோர் நேர்காணல் அழைப்பு கடிதங்களுடன் வந்தனர். அப்போது நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் முறையாக தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.