திருவண்ணாமலை,பிப்.8- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கீழ்கொவளைவேடு இந்திரா நகரில் பாம்பு கடித்து இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசி கீழ்கொவளைவேடு இந்திரா நகரில்வசிப்பவர் சுகாசினி. எஸ்.டி காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் அனுஷ்கா வயது 9 என்ற குழந்தை அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சுகாசினி அவரின் கணவர் சிவலிங்கம் ஆகியோர் வளையல் வியாபாரம் செய்ய வெளியூர் சென்று விட்டனர். பாட்டியின் பாதுகாப்பின் இருந்த குழந்தை அனுஷ்கா, திடீரென இரவு வாந்தி எடுத்து மயக்கமானது. உடனே வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அனுஷ்கா உயிரிழந்தார். பாம்பு கடித்ததால் குழந்தை உயிரிழந்ததாக சான்று வழங்கப்பட்டது. வறுமை நிலையில் வாழும் தங்கள் குடும்பம், குழந்தை இழந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனையில் உள்ளதாகவும், எனவே எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்க வேண்டும் என வந்தவாசிவட்டாட்சியரிடம் சுகாசினி கோரிக்கை மனு அளித்தார்.