districts

img

15 நாட்களில் வீட்டுமனை வழங்க பட்டா: வந்தவாசி வட்டாட்சியர் உறுதி

திருவண்ணாமலை, ஜூன் 21- திருவண்ணாமலை மாவட்டம். வந்தவாசி வட்டம்  அதியங்குப்பம், எஸ். மோட்டூர் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளர், காட்டுநாயக்கன் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,  குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா.சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ. உதயகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்டப் பொருளாளர் பாஸ்கரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்  குழு உறுப்பினர் பெ.அரி தாசு, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ந. சேகரன், வாலிபர் சங்க பொருளாளர் சுகுமாரன், நிர்வாகிகள் யாசர் அராபத், அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பேச்சுவார்த்தை நடத்திய வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, பழங்குடியின மக்களுக்கு 15 நாட்களில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.