districts

img

பெண் பயிற்சி மருத்துவருக்கு மெளன அஞ்சலி செலுத்திய மருத்துவ மாணவர்கள்!

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி கருத்தரங்க கூடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இறந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களில் மருத்துவர்கள், ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தியும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மருத்துவ மாணவியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலம் சென்று மௌன அஞ்சலி செலுத்தினர். அப்போது, இக்கொடூரச் செயலை கண்டிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்தும், கொலைக்கு நீதி கேட்டும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.