திருப்பத்தூர், அக்.28 - திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பேரூராட்சி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பால் உற்பத்தியாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்பு தீவனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பசும்பால் 42 ரூபாயாகவும், எருமை பால் 51 ரூபாயாகவும் உயர்ந்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ் வழங்க வேண்டும், சங்கங்களிலிருந்து பாலை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்பு அளவையும் தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும், 50 விழுக்காடு மானியத்தில் கலப்பு தீவனம் வழங்க வேண்டும், ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்டத் தலைவர் கோபு, மாநில பொதுச் செயலாளர் பெருமாள், விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல், செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.