திருநெல்வேலி, ஜூலை 9 - நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளால் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2ஆவது அணு உலையில் கடந்த மே மாதம் 13ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து திங்களன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தொடக்கத்தில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீர் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சுமார் 57 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பழுதை சரி செய்யும் முயற்சியில் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4ஆவது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.