districts

img

கூடங்குளம் 4-வது அணு உலையில் அணு உலைக் கலன் நிறுவப்பட்டது

மாஸ்கோ/திருநெல்வேலி, பிப். 5 - கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது அணு உலை கட்டுமான தளத்தில், கடந்த ஜனவரி 24 அன்று அணு உலைக் கலன் அதற்கான பிரத்யேக வடிவமைப்பு பகுதியில் நிறுவப்பட்டது. இந்த பணியானது, கட்டுமான தளத்தில் நடந்த கூட்டு ஒருங்கிணைப்பு குழுவின் நான்காவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ‘ரோசாட்டம்’ ஸ்டேட் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் (ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனம்) அணுசக்தி துறைக்கான முதல் துணை பொது இயக்கு நரும், ஏஎஸ்இ ஜேஎஸ்சி தலைவருமான ஆண்ட்ரே பெட்ரோவ், இந்திய அணுமின் கழகத்தின் (என்.பி.சி.ஐ.எல்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான புவன் சந்திர பதக் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த அணு உலைக் கலன், ஓபன் டாப் தொழில் நுட்பத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே 3ம் அணு உலை கட்டுமானத்தின்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாகும். (இந்த தொழில்நுட்பம் ஒரு திறந்த குவிமாடம் மூலம் அணு உலைக் கலன் அதன் பிரத்யேக இடத்தில் கச்சிதமாக பொருத்தக்கூடியது, இது கலன் நிறுவும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கும்). இப்பணிக்கான ஏற்பாடுகள் மிகக் குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்டது.

ஜனவரி 24 அன்று காலையில் உபகரணங்கள் செங்குத்து நிலைக்கு கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் 50 மீ உயரத்திற்கு தூக்கப்பட்டு அணு உலை கட்டுமானத்திற்குள் அமைப்பட்ட பிரத்யேக இடத்தில் அணு உலைக் கலன் கொண்டு செல்லப்பட்டது.

அணு உலைக் கலன் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நீராவி ஜெனரேட்டர்கள், அணு உலையை குளிரூட்டும் பம்ப்களின் உறைகள் மற்றும்  அழுத்தக்கலன் உள்ளிட்ட அணு நீராவி விநியோக அமைப்பின் உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கப் படும்.

317 டன் எடை கொண்ட இந்த அணு உலைக் கலன் கடந்த 2023-ஆம் ஆண்டில் ரஷ்யாவின் வோல்கோடோ ன்ஸ்க்கில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது, இந்தியா மற்றும் சீனாவில் கட்டப்பட்டு வரும் இரண்டு அணுமின் நிலையங்களுக்கான இரண்டு அணு உலைக் கலன் மற்றும் எட்டு நீராவி ஜெனரேட்டர்களை ஒரே நேரத்தில் கொண்டு வரக்கூடிய மிகவும் சிக்கலான மற்றும் பெரிய அளவிலான போக்குவரத்து விநியோக பணியின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டது என்று ரோசாட்டம் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.