districts

img

மினரல் வாட்டர் கம்பெனிக்கு அனுமதி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூலை 29- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீராதாரத்தை பாதிக்கும் எஸ்.எஸ்.எஸ் அக்வா ஃபார்ம் என்ற புதிய மினரல் வாட்டர்  நிறுவனத்திற்கு  அளிக்கப்பட்டுள்ள சட்டவிரோத அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி வாலிபர் சங்கத்தினர் திண்டிவனத்தில் திங்களன்று (ஜூலை 29) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  காவேரிப்பாக்கம் ஏரிக்கு சலவாதி கலங்களில் இருந்து வரும் 24 அடி அகலம் உள்ள நீரோடை வாய்க்காலில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் நகரும் மின் படிக்கட்டு அமைக்க வேண்டும். நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து தோண்டப் பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். திண்டி வனம்-செஞ்சி ரோட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இயங்கிவரும் இரண்டு மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் எம்.கே.பழனி, மாவட்டச் செயலாளர் சே. அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.ராம்தாஸ், நகரச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.