கரூர், நவ.1 - பரணி பார்க் கல்விக் குழுமத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் 71 அறிவியல் அரங்குகளில் 1186 ஆய்வுகள், 2372 இளம் விஞ்ஞானிகள், 142 நடுவர்கள் பங்கேற்றனர். பள்ளி அளவில் இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்டம், பரணி பார்க் கல்விக் குழும அளவில் நடைபெற்றது. இதனை பள்ளி தாளாளர் சா.மோகனரங்கன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், லயோலா கல்லூரி இயற்பியல் பேராசிரியருமான அறிவியல் கல்வியாளர் வி.ஜோசப் சிறப்புரையாற்றினார். பரணி பார்க் கல்விக் குழுமச் செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஜான்பாட்சா, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மொத்தம் 1186 அறிவியல் ஆய்வுகளை, 2372 குழந்தை விஞ்ஞானிகள் சமர்ப்பித்தனர். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பிரபல அறிவியலாளர்கள் பெயரில் 71 அறிவியல் அரங்குகளில் இணை அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் இளம் விஞ்ஞானிகளின் அறிவியல் ஆய்வுகளை 142 பயிற்சி பெற்ற நடுவர்கள் மதிப்பிட்டனர். ஏற்கனவே பரணி கல்விக் குழும இளம் விஞ்ஞானிகள் தேசிய அளவிலான பல்வேறு அறிவியல் மாநாடுகளில் தமிழகம் சார்பாக 6 முறையும், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் இந்தியா சார்பாக 2 முறையும், மாநில அறிவியல் மாநாடுகளில் கரூர் மாவட்டம் சார்பாக தொடர்ந்து 17 முறையும் பங்கேற்று, கரூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 17 ஆண்டுகளாக தேசிய அளவில் கரூர் மாவட்டத்தையும் தமிழகத்தையும் முன்னிலை வகிக்க செயலாற்றி வரும் பரணி பார்க் கல்விக் குழுமத்தையும், உறுதுணையாக உள்ள கல்வியாளர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த ஆண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்த 2372 குழந்தை விஞ்ஞானிகளை அறிவியல் இயக்க ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.