புதுதில்லி, மே 3 -
2023-ஆம் ஆண்டிற்கான, உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், இந்தியா மிகமோசமான வகையில் 161-ஆவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.
‘எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பா னது, உலக பத்திரிகை சுதந்திரம் தொடர்பான அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வரு கிறது. அதன்படி, இந்த அமைப்பு புதனன்று உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் 21-ஆவது பதிப்பை வெளியிட்டது.
அதில்தான், பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161-ஆவது இடத்திற்கு போயிருக்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் கூட இந்தியா 150 ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அதைக்காட்டிலும் 11 இடங்கள் கீழிறங்கியுள்ளது.
தெற்காசியாவிலேயே பத்திரிகை சுதந்திரம் மோசமாக இருக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
தெற்காசியாவிலுள்ள நாடுகளில், பூடான் 90- ஆவது இடத்தையும், அண்டை நாடான இலங்கை 135-ஆவது இடத்தையும், பாகிஸ் தான் 150-ஆவது இடத்தையும், தலிபான்களின் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தான் 152-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு என்று கூறப்படும் இந்தியா 161-ஆவது இடத்திற்குச் சென்றுள் ளது. வங்கதேசம் மட்டுமே இந்தியாவை விட மோசமாக 163-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பப்படும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா ஏன் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்தும், ‘எல்லைகள் இல்லாத செய்தியாளர் கள்’ அமைப்பு விளக்கியுள்ளது. அதில், “பத்திரி கையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் ஏகபோகம் இவை அனைத்தும் ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில்’ பத்தி ரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்ப தையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரை யுனெஸ்கோ அறிக்கையின்படி உலகம் முழுவதும் 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் 22 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேபோல அண்மைக் காலமாக இந்தியா வில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், சிறைபிடிப்புகள், வழக்குகள் அதி கரித்து வருகின்றன. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் யாராக இருந்தாலும் வழக்கு போடுவோம், மிரட்டுவோம் என்ற பாணியில் பல்வேறு தனி நபர்களும், அரசு சார் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 2022 டிசம்பர் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 363 பத்திரிகையாளர்களும், இந்தியாவில் மட்டும் 7 பத்திரிகையாளர்களும் தனது கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் அண்மையில் பிணையில் வெளியே வந்த கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பானும் அடங்குவார். இவர்களில் பலர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம், பயங்கர வாதத் தடுப்பு சட்டம் போன்ற கொடும் சட்டங்களின் கீழ் இந்திய அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. பிணை வாங்கினாலும் கூட, இவர்கள் வெளியில் வந்துவிடாதபடி மீண்டும் மீண்டும் வழக்குகள் போடப்பட்டு வருடக் கணக்கில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இவற்றையெல்லாம் கணக்கிட்டே, உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவின் தர வரிசை மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக, 1991இல் யுனெஸ்கோ மூலம் ஆப்பிரிக்க பத்திரி கையாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் அவை யால் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘மே 3’ உலக பத்திரிகை சுதந்திர தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டியே, எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் அமைப்பும் உலக பத்திரிகை சுதந்திர தரவரிசையை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.