பாபநாசம், ஜூலை 9 - தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் காவிரி பாலம் அருகே மெயின் சாலையை ஒட்டி, வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் கட்டிடத்தில் செடிகள் வளரத் தொடங்கி விட்டன. பழுதடைந்த வேளாண் விரிவாக்க மையத்தை இடித்து விட்டு, புதிய தரமான வேளாண் விரிவாக்க மையம் கட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், வேளாண்மை விரிவாக்க மையம் அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் திறந்து வைக்கப்பட்ட ரேசன் கடை கட்டடமும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. கணபதி அக்ரஹாரத்தில் உள்ள ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். மக்கும், மக்கா குப்பைகளை கொட்ட கணபதி அக்ரஹாரம் ஊராட்சியில் இடம் ஒதுக்க வேண்டும் என்றனர்.