districts

img

சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர்த்தொட்டி: தரங்கம்பாடி பேரூராட்சி முடிவு

மயிலாடுதுறை, பிப்.1- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு,  பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். கூட்டத்தில் கழுவன்திட்டு திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்திலும், சுனாமி குடியிருப்புப் பகுதியிலும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், தரங்கம்பாடி பிரதான சாலை அருகில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைப்பது, பொறையார், குட்டியாண்டியூர் பகுதிகளில் சமுதாய கூடங்களை மறுசீரமைப்பு செய்தல், புஷ்ப பாலகுரு நகரில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாக கடைகள் கட்டுதல், காத்தான்சாவடி பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி சீரமைத்து படித்துறைகள் அமைத்தல், தரங்கம்பாடி பிரதான சாலை முதல், பேருந்து நிலையம் வரை சிமெண்ட் கட்டமைப்புடம் வடிகால் அமைத்தல், குட்டியாண்டியூரில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தரங்கை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.