பரசலூர், ஆக்கூரில் கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை, ஜன.28 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டா ரத்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சமூக நலத்துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணர்வு உறுதிமொழி, தொழுநோய் விழிப் புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது. பின்னர் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5 குழந்தைகளுக்கு மரக்கன்றுகளையும், வேளாண்மைத் துறை சார்பில் ரூ.12,500 மதிப்பிலான இடு பொருட்களையும் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் வழங்கி னர். ஆக்கூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஏ.ஆர்.சந்திரமோ கன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிங்காரவேலு, அங்கன்வாடி மையம், ரேசன் கடை ஊழியர்கள், பள்ளி ஆசிரி யர்கள் அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றினர்.
குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளிய வாகனங்கள் சிறைபிடிப்பு
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாவட்டம் திருச் சோற்றுத்துறையில், குடமுருட்டி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை ஒட்டியுள்ள பகுதியில், மூன்று ட்ரிப்பர் லாரி, ஒரு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சனிக்கிழமை மணல் அள்ளு வதை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வாகனங் களை சிறைபிடித்து, மணல் அள் ளுவதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினார். அப்போது, தடுப்பணை பகுதியில் மணல் அள்ளியதால், அங்கு களிமண் தெரிகிறது. இத னால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டு விவசாயமும், நிலத் தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கும் எனக் கூறி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நி லையில், நீர்வளத்துறை காவிரி ஆற்றின் எஸ்.டி.ஓ., சிவகுமார் கிராம மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, “அரசுப் பணிகளுக்கு மணல் தேவைப்படுவதால், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தடுப் பணையின் மேட்டுப்பகுதியில் மட்டும் மணல் எடுக்கப்படு கிறது. மணல் திட்டுகள் இருக்கும் இடத்தில் மட்டுமே மணல் எடுத்துக் கொள்கிறோம். களி மண்ணாக இருந்தால் எடுக்க மாட்டோம்” என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் வாகனங்களை அனுப்பினர். மேலும், இரண்டு நாட்களில் தேவையான மணல் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மீறி மணல் அள்ளினால் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்த னர்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தொழுநோய் ஊனத்தை தவிர்க்கலாம் முகாமில் மருத்துவர் தகவல்
புதுக்கோட்டை, ஜன.28 - ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தொழு நோயால் ஏற்படும் உடல் ஊனத்தை முற்றிலும் தவிர்க்கலாம் என்றார் புதுக்கோட்டை துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழு நோய்) மருத்துவர் மு.சிவகாமி. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஊனத் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகா மிற்கு புதுக்கோட்டை துணை இயக்குநர் மருத்து வப் பணிகள் (தொழுநோய்) மருத்துவர் மு.சிவ காமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள், பொது மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். ஜன.30 முதல் பிப்.13 வரை நாடு முழுவதும் ஸ்பர்ஸ் தொழுநோய் முகாம் நடைபெற உள்ளது. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் தொழுநோ யால் ஏற்படும் உடல் ஊனத்தை முற்றிலும் தவிர்க்க முடியும். எனவே, சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் இருந்தால் உடனடியாக மருத்துப் பணியாளர்களிடம் காண் பித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு மருத்துவ உபகர ணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் ராம்சந்தர், மரு.நித்தீஸ், மாவட்ட நலக் கல்வியாளர் ராஜ சேகர பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.
புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பாபநாசம், ஜன.28 - புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தஞ்சா வூர் மாவட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “புகையான் ஒரு வகை தத்துப் பூச்சி. பழுப்பு நிறத்தில் காணப்படும். கண்ணாடி போன்ற இறக்கைகளை கொண்டிருக்கும். இவை நெற்தூர்களின் அடிப் பகுதியில் இருந்துக் கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இதனால் பயிர்கள் திட்டு திட்டாக காய்ந்து எரிந்தது போல காணப்படும். இப்பூச்சி தாக்குதலால் மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பே காய்ந்து பதராகி விடும். வயலில் நீர் தேங்கிய போதும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நேரங்களிலும் இதன் தாக்குதல் காணப்படும். பயிர்கள் நெருக்கமாய் நடப்பட்ட இடங்களில், அதிகளவு தழையூரம் இடப்பட்ட வயல்களில் இதன் தாக்கு தல் அதிகரிக்கும் வாய்ப்புண்டு. பழுப்பு நிற அந்துப் பூச்சியா னது, புல் தழை குட்டை நோய், காய்ந்த தழை குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோயை பரப்பும் காரணியாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நீர் மறைய நீர் கட்டுதல், தழைச் சத்து உரங்களை பிரித்து இடுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது இலுப்பை எண்ணெய் 6 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். அதிகளவில் தாக்கு தல் தென்பட்டால் புப்ரோபெளின் 25 எஸ்சி 300 மிலி அல்லது தையோ மீத்தாக்சம் 25 டபிள்யூஜி 40 கிராம் - இவற்றில் ஏதே னும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நெற்பயிர்க ளின் தூர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜன.28 - உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலவரம் குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை முதன்மைச் செயலாளர், ஆணையாளர் ஹர் சஹாய் மீனா சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்தார். குளத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கில், சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் இருப்பு நிலவரம், தரம் மற்றும் விநியோகம் குறித்தும், நெல்லின் ஈரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை சிப்காட் அருகில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் இருப்பு, பாதுகாப்புகள், விநியோக முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவுப் பொருட்கள் தரமா கவும், உரிய அளவுகளின் அடிப்படையிலும் விநியோகம் செய்யப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட அறி வுறுத்தினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ. இராஜேந்திர பிரசாத், நுகர்பொருள் வாணிபக் கழகக் மண்டல மேலாளர் எம்.சீதாராமன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் கு.சாந்தி, செயற்பொறியாளர் இளங்கோ, துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணத்தில் யோகா பயிற்சி முகாம்
கும்பகோணம், ஜன.28 - இந்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் யோக பயிற்சி முகாமை நடத்தின. நிகழ்ச்சிக்கு ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீனிவாசன், அபி ராமி ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப் பாளர் கீர்த்தி வாசன், மருதம் லயன்ஸ் சங்க தலைவர் இளங் கோவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். ஹார்ட்புல்னெஸ் சார்பில் 3 நாட்கள் நடைபெற்ற பயிற்சி யில், ஓய்வுநிலை தியானப் பயிற்சி, புத்துணர்வு பயிற்சி, உட லும் உள்ளமும் நலம் பெற யோகாசனம், மூச்சுப்பயிற்சியு டன் கூடிய தியானம், முத்திரைகள் எளிய யோக பயிற்சி கள், உள்முக ஆற்றலுடன் இணைக்கும் தியான பயிற்சி, குழந்தைகளின் மூளைத் திறனை மேம்படுத்தும் பயிற்சி ஆகிய பயிற்சிகளை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தோட்டத்தில் பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
வெம்பக்கோட்டை, ஜன.27- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல்துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வி. துரைச்சாமிபுரம் கண்மாய் அருகே உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அங்கு அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக சரவெடிகள் மற்றும் உதிரி வெடிகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து, பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கம் (60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தகர செட்டில் பட்டாசு பெட்டிகள் வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு
சிவகாசி, ஜன.27- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது பிச்சு பட்டி. இங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில் விதிமுறை களை மிறி 105 பட்டாசு பெட்டிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி காவல்துறையினர் கும ரேசன், பதிவேல் தீபக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உறுதி: கூப்புளிக்காடு மக்களின் போராட்டம் வாபஸ்
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி 16 ஆவது வார்டு கூப்புளிக்காடு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதிநேர அங்காடி அமைத்து தர வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மயானக் கரையிலிருந்து குளக்கரை செல்வதற்கு பாதை அமைத்து தராததைக் கண்டித்து ஜன.31 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெய்வானை தலைமையில், சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், வட்ட வழங்கல் அலுவலக வருவாய் ஆய்வாளர், பேராவூரணி சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசுத் தரப்பிலும், பேரூராட்சி கவுன்சிலர் மு.த.முகிலன், அன்பழகன், முத்துசாமி, உதயகுமார், சின்னக்கண்ணு, வீரலட்சுமி உள்ளிட்டோர் கிராமத் தரப்பிலும் கலந்து கொண்டனர். இதில், கூப்புளிக்காடு கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதிநேர அங்காடி அமைக்க, தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற்று தரப்படும். மெயின் ரோட்டில் இருந்து காமாண்டி கோயில் செல்லும் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மயான கரையிலிருந்து குளக்கரை வழியாக, பொதுப் பணித்துறை வாய்க்கால் ஓரத்தில், பாதை அமைக்க தொடர்புடைய கிராம மக்கள் சார்பில், பொதுப் பணித்துறையிடம் மனு அளிக்கும் பட்சத்தில், அதன் பேரில் பொதுப்பணித் துறையினரிடம் இருந்து உரிய கடிதம் பெறப்படும். மேலும், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் நில அளவை மேற்கொண்டு பாதை அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையேற்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
புதுக்கோட்டை, ஜன.28 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்டப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன் தலைமை வகித் தார். செயலாளர் சா.ஜெயப்பிரகாஷ், பொரு ளாளர் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். செயற்குழு உறுப்பினர் ம.மு.கண்ணன் நன்றி கூறினார். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிரு பர்கள் மீது சமூக விரோதிகள் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்தும், தமிழக அரசும், காவல்துறையும் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் பத்திரிகையாளர் மற்றும் ஊடக நிரு பர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருவாரூர் திருவாரூர் மாவட்ட பத்திரிக்கை யாளர்கள் மற்றும் அனைத்து ஊடகத்துறை யினர் கூட்டமைப்பு சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த பத்திரி கையாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட, வட்டார நிருபர்கள் பங்கேற்றனர்.