மயிலாடுதுறை, அக்.18- தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், நடுக்கரை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மரு.ஈஸ்வரன் தலைமை வகித்தார். செம்பனார்கோயில் கால்நடை உதவி மருத்துவர் அன்பரசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் கால்நடை வளர்ப்போர்களுக்கு ஆலோசனை வழங்கினர். கால்நடைகளுக்கு தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் சுமார் 150 பசுக்கள் மற்றும் நூறு ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. மழைக்காலத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.