districts

திருச்சி முக்கிய செய்திகள்

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவர் மன்றத்தில்  மார்ச் 11 இல் விசாரணை

புதுக்கோட்டை, பிப்.6-  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், வழக்கு மாற்றப்பட்ட குற்றவியல் நடுவர் மன்றம் - எண் 2 இல், வரும் மார்ச் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதித்துறை நடுவர் சி. பாரதி உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் அன்றைய நாளில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி காவல்துறையிருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, இந்த வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன் கோப்புகள் குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வியாழக்கிழமை வந்தன. வழக்கு விசாரணை வரும் மார்ச் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய நாளில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவர் சி. பாரதி உத்தரவிட்டார்.

கும்பகோணத்தில் ஓவிய கண்காட்சி

கும்பகோணம், பிப்.6-  கும்பகோணத்திற்கு விவேகானந்தர் விஜய விழாவை முன்னிட்டு போர்ட்டார் டவுன் ஹால், அரசு கவின் கலைக் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா டிரஸ்ட் சார்பில், கடந்த 3 ஆம் தேதி ஓவிய கண்காட்சி  கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் திறந்து வைத்தார். நிறைவு நாளான 5 ஆம் தேதி மாலை சிறந்த ஓவியர்களுக்கு பரிசளிக்கும் விழா போர்ட்டர் டவுன் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு சான்றிதழ், புத்தகம் மற்றும் உதவித்தொகையை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கங்கினார். 

பேராவூரணி  அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி  ஆண்டு விழா

தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  பள்ளித் தலைமை ஆசிரியர் க.தனலெட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை ச.விஜயகுமாரி வரவேற்றார். ஆசிரியை த.கிருஷ்ணவேணி ஆண்டறிக்கை வாசித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா பாரூக், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீத், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எஸ். மகேஸ்வரி, வே. கயல்விழி, ஆசிரியர் பயிற்றுநர் ஷாஜிதா பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் த.புவனேஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவியர்கள் 12 பேருக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான காலணிகளை, சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் வழங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரிடம் வழங்கினார்.

அனைவருக்கும் 100 நாள் வேலை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை 

அறந்தாங்கி, பிப்.6-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கட்டுமாவடியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பேரவை கூட்டம், மணமேல்குடி ஒன்றிய துணைத் தலைவர் ஏ. அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.  மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் எம். தங்கவேலு துவக்கவுரையாற்றினார். ஒன்றியத் தலைவர் நாராயணசாமி, ஒன்றியச் செயலாளர் எம். சுரேஷ் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். அட்டை இல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை கொடுக்க வேண்டும். உதவித்தொகை பெறாத மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள், பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, ஒன்றியப் பொருளாளர் ஆரோக்கிய சுந்தரம் நன்றி கூறினார்.