தஞ்சாவூர், நவ.29- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய அரசுக் கட்டடம் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். திருவையாறு பேரூராட்சியில், மூலதன மானிய நிதித் திட்டத்தின்கீழ் ரூ.2கோடி மதிப்பிலான ஈ.வெ.ரா. காய்கறி மார்க்கெட் கட்டடம் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஏல மையம், கலை ஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பிலான நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம், ரூ.20 லட்சம் மதிப்பிலான “இளைஞர் திறன்வளர் மையம்” நூலகக் கட்டிடம் ஆகியவற்றை நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திருவையாறு பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.