கும்பகோணம், பிப்.6- பல்கலைக்கழகத்தில் உலமா தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை கைவிட்டு, தொடர்ந்து பழைய கட்டணமே தொடர வேண்டும் என, ஜமாஅத்துல் உலமா சபையினர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டனர். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் அப்ஜலுல் உலமா தேர்வுக்கான கட்டணம், பழையதே தொடர வேண்டும். அரபிக் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட கோரிக்கை மனுவை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனை தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவர் மவ்லவி ஹாஜா முஹைதீன், செயலாளர் மவ்லவி ஜபருல்லாஹ் ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர். அப்போது கோரிக்கைகளை பரிசீலனை செய்த அமைச்சர், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். அப்போது முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஷாஜஹான், மவ்லவி ஷாநவாஸ் லத்தீபி, ஆவணியாபுரம் அரபிக்கல்லூரி பேராசிரியர் தேங்கை ஷறபுத்தீன், திருவிடைமருதூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் செயலாளர் அஹமது உள்ளிட்ட உலமா பெருமக்கள், சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் சம்சுதீன் ஜமாலி உள்பட பலர் உடன் இருந்தனர்.