திருவாரூர், பிப்.15- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் இரண்டு சதம் சேம நலநிதி உருவாக்கிட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர்களின் மாவட்டத் தலைவர் டி. வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. கஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, பொருளாளர் இரா. மாலதி மற்றும் அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகத்தில் உள்ள அரசு கிடங்கு மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, குடிநீர், ஓய்விடம், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.3000 பென்ஷன் தொகை வழங்கிட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பார்த்து சரி செய்து, மூட்டை தைக்க சிப்பம் ஒன்றுக்கு கூலி ரூ.30 ஐ வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.