districts

img

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் படுகொலை நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்: சிபிஎம் கண்டனம்

மயிலாடுதுறை, பிப்.15-   மயிலாடுதுறை அருகேயுள்ள பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் கல்லூரி மாணவர், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை அருகேயுள்ள முட்டம் வடக்கு தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையை காவல்துறையின் துணையோடு செய்து வருகின்றனர். சாராயம் விற்பனையால் பாதிக்கப்படுபவர்கள் தட்டிக் கேட்டால் சாராய வியாபாரிகள், அவர்களைத் தாக்குவது, கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில், முட்டம் பகுதியில் சோதனை நடைபெற்ற நிலையில் சாராய வியாபாரி ராஜ்குமாரை செய்தனர். வியாழனன்று ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமாரிடம் “தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள்? என்று கேட்ட தினேஷ் என்ற சிறுவனை சாராய வியாபாரிகள் கடுமையாக அடித்துள்ளனர்.  சிறுவனை தாக்குவதை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரது மகன் ஹரிஷ், பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞரும், உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகனான ஹரிசக்தி ஆகியோரை, சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் கொடூரமாக தாக்கி கத்தியால் சராமாரியாக குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த நபர்களின் உடல்கள் கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.  சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சாராய வியாபாரிகளுக்கு காவல்துறை துணையாக  உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இந்நிலையில், முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளால், கல்லூரி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைப்பெறுகிறது என்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வாலியுறுத்தியும், காவல்துறையிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமமான முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்டாலே மக்களை தாக்கி வந்த சாராய வியாபாரிகள், இன்று கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வந்த இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.  புதுச்சேரி மாநிலமான காரைக்கால் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள பெரம்பூர் காவல் எல்லைப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை ஆறாக ஓடுகிறது. தடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர் நாகவள்ளி என்பவர், கையூட்டு வாங்கிக்கொண்டு சாராய விற்பனைக்கு துணை நின்று வருகிறார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படும் நாளில் கூட பெரம்பூர் எல்லைக்குட்பட்ட சோதனைச்சாவடி வழியாகவே சாராயம் கடத்திக்கொண்டு வருகின்றனர்.  சோதனை என்ற பெயரில் பெயரளவிற்கே சோதனை செய்வதோடு சாராய வியாபாரிகளுக்கு சாதகமாகவும், அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதிலுமே ஆய்வாளர் நாகவள்ளி செயல்படுகிறார். கள்ளச்சாராய விற்பனை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் அப்பாவி கல்லூரி மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  குற்றவாளிகள் குறித்து, பலமுறை புகார் அளித்தும் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் படுகொலைக்கு காரணமான காவல் ஆய்வாளர் நாகவள்ளியையும் கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.