பெரம்பலூர், மார்ச் 24- ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிறன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க.கற்பகம் வகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஞாயிறன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் என என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், ஞாயிறன்று நான்கு தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 5801 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்திலும், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், இதர தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் பேராவூரணி சட்டசபை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியருமான பூஷணகுமார் தலைமையில், நடைபெற்றன. அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர்கள் புதுக்கோட்டை பா.ஐஸ்வர்யா, அறந்தாங்கி சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.