திருச்சிராப்பள்ளி, ஏப்.8- 2022-2023 நிதியாண்டுக்காக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் சட்டசபையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டது. மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்கு மட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முதல்பரிசாக ரூ.10 லட்சம், 2-ம் பரிசாக ரூ.5 லட்சம், 3-ம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர் துறை தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 5, சிட்கோ தொழிற்பேட்டை, துவாக்குடி, திருச்சி-15 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மே 1-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.