districts

வாகனம் கவிழ்ந்து  15 மாணவர்கள் காயம்


புதுக்கோட்டை, ஜூன்.20-  புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றின் வாகனம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றது. வாகனம் தொண்டைமான் ஊரணி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்துக்கான குழிக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை அப்பகுதி மக்களும், பெற்றோர்களும் மீட்டு மழையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து ஆதனக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.