districts

img

கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்கக்கோரி ஹாலோ பிளாக் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 3-  கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிமெண்ட் கல் மற்றும் சிமெண்ட் தொட்டி (ஹாலோ பிளாக்) உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிமெண்ட் கல் மற்றும் சிமெண்ட் தொட்டி (ஹாலோ பிளாக்) உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் குடிசைத் தொழில்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த குடிசைத் தொழிலில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில்  கிரஷர் பொருட்கள் விலை அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரைமரி டஸ்ட் ரூ.2,000-த்தில் இருந்து 4,000-ஆகவும், கிரஷர் மண் ரூ.2,300-ல் இருந்து 4,000-ஆகவும், அரை ஜல்லி ரூ.2,200-த்திலிருந்து 4,000-மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, கிரஷர் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, ஹாலோ பிளாக் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட ஹாலோ பிளாக் (குடிசை தொழில்) தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.முருகானந்தம் தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா உரையாற்றினார். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான் மற்றும் நிர்வாகிகள் ஆர். சொம்புலிங்கம், எம். பன்னீர்செல்வம், எஸ். அசோக்பாண்டி உள்ளிட்டோர் பேசினர்.