districts

img

நிலத்தடி வடிகால் திட்டப் பணிகளால் சாலை படுமோசம் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தம்: பொதுமக்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.21 - திருச்சி, கே.சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி வடிகால் (யு.ஜி.டி)திட்டம் காரணமாக சாலையின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.  

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், விபத்து அபாயங்களுக்கும் உள்ளாகின்றனர். அங்கு  சாலை சேதமடைந்து பெரிய குழிகள், சமநிலை இல்லாத தரை மற்றும் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த மோசமான நிலையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணங்கள் மற்றும் அவசர உதவிகள் தடைபடுகின்றன.

பல மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பு தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கண்டித்து கவிபாரதி நகர் பகுதி மக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம், ‘நடவடிக்கை எடுப்பதாக’ அதிகாரிகள் உறுதி அளித்தனர்.