districts

img

ஒன்றிய பாஜக அரசு பின்பற்றக்கூடிய கொள்கைதான் ஓய்வூதியரின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம்

திருச்சிராப்பள்ளி, டிச,19- ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் பின்பற்றக்கூடிய பொருளாதார, சமூக, அரசியல் கொள்கைதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் குற்றம்சாட்டினார்.

அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 7 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு டிசம்பர் 19 அன்று திருச்சியில் துவங்கியது.  

மாநாட்டு அரங்கத்தின் நுழைவு வாயிலில் தபால் தொலைத் தொடர்பு தொழிற்சங்க தலைவர் சி.எஸ்.பஞ்சாபிகேசன் நூற்றாண்டு பிறந்தநாள் வளைவு அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டின் முதல் நாளான வியாழனன்று பொன்மலை சங்கத்திடலில் பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் எடுத்துக் கொடுக்க  அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவர் பி.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அங்கிருந்து அவரது தலைமையில் கொண்டு வரப்பட்ட பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.மோகன்தாஸ் பெற்றுக் கொண்டார்.

திருப்பூர் குமரன் நினைவிடத்திலிருந்து   கோவை  மாவட்டச் செயலாளர் குடியரசு, மாவட்ட தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில்  கொண்டுவரப்பட்ட தேசியக் கொடியை புதுச்சேரி முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல் பெற்றுக்கொண்டார்.

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் தலைமையில் கொண்டுவரப்பட்ட சங்க கொடியை சிறப்பு அழைப்பாளர் பி.ராமசாமி பெற்றுக் கொண்டார்.

மாநாட்டில் தேசியக்கொடியை மாநிலத் தலைவர்  சி.கே.நரசிம்மன் ஏற்றினார். சங்க கொடியை அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. ஜெயராஜ் ஏற்றினார்.

எல்.கே.எஸ். மஹாலில் நடந்த பொது அரங்கிற்கு மாநிலத் தலைவர் சி.கே. நரசிம்மன் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜான்போர்ஜியா வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநில செயலாளர் ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். 

போராட்டம் மட்டுமே ஒரே வழி

அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராஜ் துவக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், ஒன்றிய அரசு பல்வேறு புதிய பென்சன் திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஓய்வூதியர்களுக்கு பழைய பென்சன் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் அதற்கு மாற்றாக என்பிஎஸ், யுபிஎஸ் என்ற பல நடைமுறைகளை அமல்படுத்தி அதன் மூலம் பென்சன் எவ்வளவு கிடைக்கும் என்பதே தெரியாத அளவிற்கு இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்தக்கோரி கடந்த நவம்பர் 12 ஆம் தேதியிலிருந்து தில்லியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோரிக்கைகளை வென்றெடுக்க  போராட்டம் மட்டுமே ஒரே வழி. வேறு எந்த வழியிலும் அதை பெற முடியாது என்றார்.

ஏ.கே. பத்மநாபன் 

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில்,  சமூக ஒடுக்கு முறையை எதிர்த்து போராடுகின்ற பெண்கள், இளைஞர்கள், பல சமூக பிரிவுகளை சார்ந்தவர்கள், சிறுபான்மை மக்கள், தொழிற்சங்கத்திற்கும் உழைப்பாளி மக்களின் எல்லா அமைப்பிற்கும் இன்றைக்கு நமக்கு முன்னால் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனை ஆட்சியாளர்கள் பின்பற்றக்கூடிய பொருளாதார, சமூக, அரசியல் கொள்கைதான். விவசாயிகள், தொழிலாளர்கள் செல்வத்தை உருவாக்கவில்லை; அம்பானியும், அதானியும் கார்ப்பரேட்டுகளும் தான் செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் கூறுகிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்கள், உழைப்பாளி மக்கள், நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு இந்தியாவை கனவு கண்டனர். அந்த  இந்தியாவை உருவாக்கும் போராட்டமாக உங்களுடைய போராட்டம் இருக்க வேண்டும். அந்த போராட்டத்தினால்தான் பென்சனை பாதுகாக்க முடியும். உங்களது மருத்துவ உதவிகளை பாதுகாக்க முடியும். பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களுக்காகவும் நாம் போராட வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டில் தோழமைச் சங்க நிர்வாகிகள் எஸ்.செல்லப்பா, ஏ. பாபு ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன்தாஸ், வி.வெங்கட்ராமன், வி.சீதாலெட்சுமி, பி.ராஜு,  சையத் இத்ரிஸ், கே.கோவிந்தராஜ், பி.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புக்குழு பொதுச்செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.