கஞ்சா விற்க முயன்றவர்களை துரத்திப் பிடித்த போலீசார்
அரியலூர், டிச.15 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம்-செந்துறை பிரிவு ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் இலையூர் கண்டியங் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (27), இலையூர் காமராஜர் நகரை சேர்ந்த சிவபாலாஜி (21) என்பது தெரியவந்தது. மேலும் சோதனையில் அவர்கள் இருவரும் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போலிசாரின் விசாரணையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்ய செந்தில்குமார் என்பவர் சென்னையிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்குமார் மற்றும் சிவபாலாஜி ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா விற்பனையாளர்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார் பாஸ்கர், வினோத்குமார் ஆகியோரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.
நாடாளுமன்ற சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் அமைச்சர் எஸ்.ரகுபதி வலியுறுத்தல்
புதுக்கோட்டை, டிச.15- நாடாளுமன்ற சம்பவத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மை யைச் சொல்ல வேண்டும் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு: அன்றைக்கு சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசார ணையைக் கோரினார்கள். இப்போது, நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? தனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே எம்பிக்கள் பாஸ் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடக பாஜக எம்பி எப்படி பாஸ் கொடுத்தார்? புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்ல வேண்டும். திமுகவினர் எப்படி நாகரீகமாகப் பேச வேண்டும் என ஆளுநர் தமிழிசை எங்க ளுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசிய மில்லை. அமைச்சர் உதயநிதி துணிச்சலாகப் பேசிவருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு சொல்கிறார்கள். ஆளுநர் முறைப்படி அரசியல் பேசக் கூடாது. ஆனால் தமிழிசை தொடர்ந்து தன்னை பாஜக மாநிலத் தலைவராகத்தான் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார். புழல் சிறையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தா லும் அவற்றையும் மீறி ஒருவர் தப்பியிருக் கிறார். பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பிப் போனதாக சொல்கிறார்கள். நிச்சயம் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரியலூர் அருகே காட்டில் பெண் சடலம் மீட்பு
அரியலூர், டிச.15- அரியலூர் அருகேயுள்ள கருவேலங்காட்டில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம் மீட்கப்பட்டது. அரியலூர்-பாலம்பாடி கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வஞ்சான்தான் ஓடை ஒட்டியுள்ள கருவேலங்காட்டில், வெள்ளிக்கிழமை மரங்களை வெட்டச் சென்ற தொழிலாளர்கள், அங்கு பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள், அரியலூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில், சடலம் இருந்த இடத்திலுள்ள ஒரு கல்லில் ரத்தம் படிந்திருப்பது, தெரியவந்தது. இதனை சேகரித்த காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பாலம்பாடியில் வசித்து வரும் மூர்த்தி மனைவி ராணி(60) என்பதும், இவர் கூடை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.
தஞ்சையில் போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், டிச.15 - தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி – I , II & II A, IV தேர்வு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் (TET) போன்ற தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், காவல்துறையில் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தேர்விற்கான எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வும் முடிவுற்று, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நேர்முகத்தேர்விற்கான தகுதியுள்ளோர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்நேர்முகத்தேர்விற்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், மாதிரி நேர்முகத்தேர்வு, டிசம்பர் 20 புதன் கிழமையன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது . இதற்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்நேர்முகத் தேர்வானது காவல்துறை மற்றும் இதர துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விருப்ப முள்ள தேர்வர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப் படம் ஒன்றை எடுத்து வரவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட தேர்விற்குத் தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் பதிவெண்ணை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பியோ அல்லது 04362-237037 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்தோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இளைஞர்கள் இவ்வாய்ப் பினை பயன்படுத்தி நடைபெறவுள்ள மாதிரி நேர்முகத்தேர்வில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
அழகியநாயகிபுரத்தில் மயான வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை
தஞ்சாவூர், டிச.15 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் மேனகா, ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இக்கூட்டத்தில் கிளைச் செயலாளராக பி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். அழகியநாயகிபுரம் ஊராட்சி இரளிவயல் பகுதியில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு தனி சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வெள்ளங்குழி பகுதியில் உள்ள 25 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி இல்லாத 14 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.