தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறையில் சமீபத்தில் புதிதாக போட்ட சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ள காட்சி.
பணியிட மாறுதல் பெற்றுத் தருவதாக கூறி செவிலியரிடம் பணம் பறித்த இளைஞர் கைது
தஞ்சாவூர், ஜூலை 4- தஞ்சாவூரில் சுகாதாரத் துறையில் பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி செவிலியரிடம் ரூ.31 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய இளைஞரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் புஷ்பாஞ்சலி. இவர் தற்காலிக செவிலியராக கடந்தாண்டு வேலை பார்த்து வந்த போது, அவரிடம் அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் அறிமுகமானார். அப்போது தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவ லகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களுக்கு விரும்பும் இடத்தில் பணி மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி யுள்ளார்.
பின்னர் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நிர்வாக அலுவலர் பேசுவதாக தொடர்பு கொண்டு மற்றொருவரும் புஷ்பாஞ்சலியிடம் பேசியுள்ளனர். இருவரும் புஷ்பாஞ்சலியிடம் பேசி நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் வாங்கித் தருவதாக கூறி, மூன்று தவணைகளாக ரூ.31 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறி ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து புஷ்பாஞ்சலி தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்.14 அன்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூரில் பதுங்கி இருந்த தஞ்சாவூர் மானாங்கோரை குடியானத் தெருவைச் சேர்ந்த நெ.ஆனந்த்(34) என்பவரை செவ்வாயன்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சிறுபான்மையின மாணவர்கள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
கரூர், ஜூலை 4 - கல்விக் கடன்கள் பெற சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி கடன்
நடப்பாண்டு முதல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மை யினர் மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன்கள் ரூ.5,00,000 வரை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மேலும், ரூ.1,00,000 வரை எவ்வித பிணையம் இன்றியும், ரூ.1,00,000 முதல் ரூ.5,00,000 வரை தகுந்த பிணையத்துட னும் கல்விக்கடன் பெற்றிட இயலும்.
எனவே கரூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தகுதிகள்:
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவ ணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கவிதை நூல் வெளியீட்டு விழா
பொன்னமராவதி,ஜூலை 4- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் முத்தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மூத்த கவிஞருமான முத்துராமன் எழுதிய போகிற போக்கிலே என் கவிதைகள் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முத்தமிழ் மன்ற தலைவர் நெடுஞ்செழியன் நூலை வெளியிட வள்ளல் பாரி நற்பணி மன்ற தலைவர் பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.
தோட்டங்களில் ஊடுபயிர் சாகுபடி மூலம் தீவன உற்பத்தியை பெருக்க திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
மயிலாடுதுறை, ஜூலை 4- ஒருங்கிணைந்த தீவனபயிர் மேம்பாட்டுத்திட்டம் 2024-25 மூலம் தோட்டங்கள்,பழத்தோட்டங்களில் ஊடுபயிர் சாகுபடி மூலம் தீவன உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டம் செயல்படுத்துதல் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
25 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகை யில், நீர்ப்பாசன வசதி கொண்ட மர பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டு காலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000-ம் ஒரு ஹெக் டேருக்கு ரூ.7500-ம் மானியமாக வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தில் சிறு குறு விவ சாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே தகுதிவாய்ந்தவர்கள் வரும் ஜூலை-20 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி திட்ட விளக்கம் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார்.