districts

கோரிக்கைகளை நிறைவேற்ற வட்டாட்சியர் உறுதி போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், ஆக.12 -

     திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்க மங்கலம் ஊராட்சியில் ராமப்பா தோட்டம், சிவபுரி கல்விக்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும், பழுதடைந்த ரேசன்  கடையை இடித்துவிட்டு, புதிய ரேசன் கடை கட்டித் தர வேண்டும்.  மேல சேதுராயநத்தம் கிராமத்தில் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.

     கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலங்குடி கடைவீதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

     போராட்டத்தை அறிந்த வலங்கைமான் வட்டாட்சியர் அன்பழ கன், பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்பேரில் வட்டாட்சியர்  அலுவலகத்தில் வலங்கைமான் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் மற்றும்  வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பா.விஜய், தலைவர் எஸ். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.

    இதில், மேற்கண்ட கோரிக்கைகளை இரண்டு மாதத்திற்குள் நிறைவேற்றித் தருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்  அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பின்னர் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரப்படும் என வட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கப் பட்டது. இதனால் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.