மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை இராமநாதபுரம், பிப்.15- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த நிலையில், இந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக சேதமடைந்தது. இதனால், அங்கன்வாடி மையம் கட்டிடமே இல்லாமல் இயங்கி வருகிறது. மேலும் அங்கு பயிலும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டிடம் இல்லாததால், வெயிலில் அமர்ந்து தங்களது கல்வி தொடர்ந்து வருகின்றனர். இதனால், குழந்தைகளின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அங்கன்வாடி மையம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அதற்கு நிதி ஒதுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் பேரூராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இது பேரூராட்சி எல்லைக்கு உட்பட்டது என கூறுகின்றனர். அங்கன்வாடி அதிகாரியை தொடர்பு கொண்டால், இது தொடர்பாக பலமுறை புகார் வந்துள்ளதாகவும் நிதி வந்தவுடன் முதலில் இந்த கட்டடத்தை கட்டி தருவதாகவும் கூறுகிறார். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு அங்கன்வாடி கட்டிடத்தை கட்டி தர வேண்டும், மாவட்ட நிர்வாகம் அலட்சியத்தால் இதுபோன்ற தவறுகளும் நடைபெறுகின்றன. மாவட்ட நிர்வாக நிதியிலிருந்து கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.