districts

தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 ஆவது நினைவு தினம்

மயிலாடுதுறை, பிப்.22-   தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினத்தை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வியாழனன்று தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அவரது  திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகையில்,     தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்திய மக்களின் தன்மானத்தையும், தன்னுரிமையையும் காக்க அண்ணல் மகாத்மா காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் தனது தாயாருடன் இளம் வயதிலேயே வரலாற்று நாயகி வள்ளியம்மையும் களம் இறங்கினார்.  தியாகத்தின் திருவுருவாய் சுடர்விடும் வீராங்கனை வள்ளியம்மையின் வரலாற்றை உலகறியச் செய்து பெருமை சேர்க்கும் வகையில்  தில்லையாடி வள்ளியம்மையை போற்றும் வகையில் தில்லையாடியில் நினைவு மண்டபம் 1971-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், செம்பனார்கோவில் ஒன்றிய குழுத்தலைவர் நந்தினிஸ்ரீதர், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பாஸ்கரன், தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனுசியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.