districts

அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், டிச.9 - அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், குழந்தை இறந்து பிறந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெள்ளூர் புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர்  கூலித் தொழிலாளி கேசவரமணி. இவரது மனைவி கண்ணகி (33). கர்ப்பிணியான கண்ணகிக்கு வியாழக்கிழமை மதியம் 3:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, பிரசவ வலி இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (டிச.8) அதிகாலை 3 மணிக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்த போது, வயிற்றில் ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கண்ணகியின் உறவினர்களிடம் மருத்துவர் தெரிவித்த போது, ‘உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி’ உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர் கண்ணகி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு வந்த தஞ்சாவூர் மாவட்ட இணை இயக்குநர் திலகம், மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசியதால், கண்ணகியின் உறவினர்கள் ஆவேசமடைந்து மருத்துவனை முன்பு வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார்.  மேலும் வட்டாட்சியர், காவல்துறையினர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோர் கண்ணகியின் உறவினர்களிடம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சனிக்கிழமை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்படும் எனவும், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.