districts

img

தஞ்சாவூரில் பாரம்பரிய கோலப் போட்டி

தஞ்சாவூர், ஜன.17 - பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பாரம்பரிய கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 250 மீட்டர் தொலைவுக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்று, 200 பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனர். வண்ணங்கள் இல்லாமல் வெள்ளைக் கோலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதில், முதல் பரிசை மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சேர்ந்த என்.ப்ரியா, இரண்டாம் பரிசை வடக்கு வீதியைச் சேர்ந்த பவித்ரா, மூன்றாம் பரிசை பூண்டியைச் சேர்ந்த ஜெயபாரதி ஆகியோருக்கு மாவட்டச் சுற்றுலா அலுவலர் அ.சங்கர் வழங்கினார். மேலும், 7 பேருக்கு ஆறுதல் பரிசும், கோலம் போட்டவர்களில் வயது குறைவான மேல வீதியைச் சேர்ந்த கனிஷ்கா (8), வயது அதிகமுள்ள சிவயோகம் (87) ஆகியோருக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ஏ.சசிகலா அமர்நாத், வீ பெண்கள் அமைப்பு தலைவர் ஹேமலதா, ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மோனிகா, எட்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.