சிதம்பரம், பிப்.13- 7-வது ஊதியக்குழு நிலுவை தொகைகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், யுஜிசி விதிமுறைகளின் படி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு பெற்ற முனைவர் பட்டங்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், செல்ல பாலு, பரணி, ரொனால்டு ரோஸ்,இமயவரம்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்கலைக்கழக அயர் பணியிட ஆசிரியர்களை அவர்கள் தற்போது பணிபுரியும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உடனடியாக உள்ளெடுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் காணப்படும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அயற்பணியிட ஆசிரியர்களை பல்கலைக்கழகத்திற்கு திரும்ப அழைக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை வழங்கப்படாமல் உள்ள காலம்முறை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட்டமைப்பின் செயற்குழுவை முடிவின் படி அடுத்த கட்ட நடவடிக்கை செல்ல இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.