மன்னார்குடி, ஜூலை 29 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளையின் சார்பாக கலை இலக்கிய இரவு ஞாயிறன்று மன்னார்குடி பங்கரடியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் கா.வீ. பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் கலை இரவை தொடங்கி வைத்து உரையாற்றினார். திருவாரூர் மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் மு. ல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சிவகங்கை சீமையின் கங்கை கருங்குயில்கள் கலைக்குழுவின் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், மாடு ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி என்னும் தலைப்பில் உரையாற்றினார். நிழலின் வேர் பற்றி தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா உரையாற்றினார். கலை இளமணி ச.ப்ரீத்தி சித்தேரி, க.சந்திரசேகர் ஆகிய இளைய பாடகர்களின் நாட்டுப்புற நல்லிசை நிகழ்ந்தது. கவிஞர்கள் சரஸ்வதி தாயுமானவன், சிவ.கந்தசாமி, மாணிக்கம், துரைகோவில், அசோகன், ப.மணிவண்ணன், மேலநாகை பாரதி, பூமிநாதன், சூரியகலா சரவணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மன்னார்குடி நகரப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு தமிழ் தேர்வில் அந்தந்த பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நூல் பரிசளிப்பு வழங்கப்பட்டது. மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை முனைவர் அ.சரவண ரமேஷ் மாணவர்களை பாராட்டி உரையாற்றினார். புதுகை பூபாளம் கலைக்குழுவின் நையாண்டி தர்பார் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார். முன்னதாக மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கலைஞர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. விழா மேடை நோக்கி வந்த பேரணிக்கு பேரா.முனைவர் ந.லெனின் தலைமை வகிக்க. ஆப்டெக் ப.ரமேஷ் துவக்கி வைத்தார்.