தஞ்சாவூர், டிச.16 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் எட்டு துறைகளும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 5 துறைகளும் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். தமிழ்த் துறையுடன் இலக்கியத் துறைத் தலைவர் ஜெ.தேவி, ஆங்கிலத் துறையுடன் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் இரா.சு.முருகன், வரலாற்றுத் துறையுடன் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் ஆ.துளசேந்திரன், கணினியியல் துறையுடன் கணிப்பொறி துறைத் தலைவர் அ.செந்தில்குமார், இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையுடன் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் கு.க.கவிதா ஆகியோர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.திருவள்ளுவன் தலைமை வகித்து பேசுகையில், “இரு நிறுவனங்களும், கருத்தரங்கு சார் பரிமாற்றங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மாணவர்-ஆசிரியர் ஆராய்ச்சி ஒருங்கிணைந்து ஆய்வு செய்து கொள்வது தொடர்பாக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருடங்கள் (2023-2028) செய்து கொள்ளப்படுகிறது” என்றார். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சுகந்தி நன்றி கூறினார்.