districts

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறுவட்ட சதுரங்க போட்டி

அரியலூர், ஆக.12 -

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், திருமானூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    போட்டியை ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில், 11 வயது பிரிவில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், 14வயது பிரிவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையும், 17 வயது பிரிவில் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையும், 19 வயது பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவியர் என திருமானூர் ஒன்றிய அளவில் 50 அரசு ஆரம்பப் பள்ளி, 10 அரசு உதவிபெறும் பள்ளி, 20 நடுநிலைப் பள்ளி, 14 அரசு உயர்நிலைப்பள்ளி, 14 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 648 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    போட்டிகளுக்கு நடுவர்களாக கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் வீராசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி நன்றி கூறினார்.