districts

img

தமிழ் திங்கள், கிழமை பெயர்களையும் எண்களின் வரி வடிவங்களையும் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்

தஞ்சாவூர், ஜன.6-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில், பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ் நாள்காட்டி அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்ப தமிழர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி நாட்காட்டியை வெளியிட மருத்துவர் துரை. நீலகண்டன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், தமிழ்நாடு அரசு நடத்திய தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற பேராவூரணி வட்டார மாணவர்கள் ஆ.நிவேதா, சே.அபிநயா, மு.தர்ஷினி, ச.சாதனா, ர.நிரஞ்சனா மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற மாணவி மு‌.கிருபாஸ்ரீ ஆகியோர் பாராட்டப் பெற்றனர். இந்த மாணவர்களை உருவாக்கிய தமிழாசிரியர் வே.கயல்விழி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ச.மகேஸ்வரி, பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேனாள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சரண்யா, சமூக நற்பணிகளுக்கு ஊக்கம் கொடுத்து வரும் பொறியாளர் தொ.ரெ.முருகேசன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.  நாள்காட்டி அறிமுக விழாவில், “தமிழ் ஆண்டின் தொடக்கம் தைத் திங்களா சித்திரைத் திங்களா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும், இருட்டடிப்பு செய்யப்பெற்ற தமிழர்களின் தமிழ் மாதப் பெயர்களை பள்ளி பாடத்தில் சேர்த்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும், தமிழ் எண்களை மாணவர்களிடம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று விழாவில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் கல்விக் கழகம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் அம்பேத்கர் நூலக வாசகர்கள், பாரதி மகளிர் தையல் பயிலக  மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் கழக பொறுப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார், நிறைவாக தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல் நன்றி கூறினார்.