அறந்தாங்கி, ஆக.24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, சுனையக்காடு கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆடிப்பெருந் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிதார்கம்புக்கான மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. இந்தப் போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. போட்டி, பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு மாடு என 5 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.2.68 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. அறந்தாங்கி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.