திருச்சிராப்பள்ளி, மே 11 - திருச்சி ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 6 ஆம் ஆண்டு மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் போட்டியை தமிழ்நாடு மாநிலப் பூப்பந்தாட்டக் கழக செயலாளர் எழிலரசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள், பூப்பந்தாட்ட கழக தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சை, சேலம், தர்மபுரி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 75 ஆண்கள் அணியும், 70 பெண்கள் அணியும், மேலும் தென்தமிழகத்தில் முதல் முறையாக 24 கலப்பு இரட்டையர் அணியும் மற்றும் 70 பி கிரேடு அணி என மொத்தம் 1,110 பேர் கலந்து கொண்டனர். இதில் லீங் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு மாலையில் விளையாடினர். இதைத் தொடர்ந்து 2-வது நாளாக ஞாயிறன்று அரையிறுதி போட்டியும், இறுதிப் போட்டியும் 8 பிரிவுகளில் நடைபெறுகிறது.