தஞ்சாவூர், ஜன.4 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஜே.சி.குமரப்பாவின் 132 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, காந்தியப் பொருளாதார மேதை குமரப்பாவின் 132 ஆவது பிறந்த நாளில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி பேராவூரணி கிளையின் முதன்மை மேலாளர் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளியின் செயலாளர் ஜீவிகா ஆகியோர், ஜே.சி.கே சிபிஎஸ்இ வித்யாலயா பள்ளியின் லெவல் அப்-24 கல்வி அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தனர். மாணவ, மாணவிகள் பல வகையான அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில், குமரப்பா பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுபா நன்றி கூறினார்.