தஞ்சாவூர், நவ.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரத்தநாடு ஒன்றிய 24 ஆவது மாநாடு, டி.பி.எஸ் மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, கு.பாஸ்கர், கஸ்தூரி, அரங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் டி.மோகன்தாஸ் கொடியேற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ந.சுரேஷ்குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு வாழ்த்திப் பேசினார். மாநாட்டில், எஸ்.கோவிந்தராஜ் ஒன்றியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒரத்தநாடு நகரத்தில் இயங்கும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். ஒக்கநாடு, கீழையூர், பருத்திக்கோட்டை, அரசப்பட்டு நீரேற்று நிலையங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஒரத்தநாடு வழியாக வந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலையில் செல்லாமல், பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.