மயிலாடுதுறை, நவ.2- 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளப் பாக்கியை தீபாவளி பண்டிகைக்கு முன்பே வழங்கிடக் கோரி வியாழனன்று சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இலுப்பூர் சங்கரன்பந்தலில் மறியலுக்கு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.ராணி உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருக்கடையூரில் மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். காட்டுச்சேரியில் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் ,மாவட்டக்குழு உறுப்பினர்கள் ,பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் போராட்டம் நடைப்பெற்றது.
பேராவூரணி
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக் குழு சார்பில், ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். வாசு உரையாற்றினார். 250 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். திருக்காட்டுப்பள்ளியில் நூதனப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில், திருக்காட்டுப்பள்ளி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று, இந்தியன் வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து சமையல் செய்யும் நூதனப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் பூதலூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்” என உறுதி அளித்தனர்.