கரூர், ஜூலை 20 - மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கரூர் மாவட்ட 8 ஆவது ஆண்டு பேரவை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் கே.வெள்ளையன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.மதியழகன் வரவேற்று பேசினார். மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி.பஷீர் பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.பி.கந்தசாமி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் ஏ.தியாகராஜன் வரவு, செலவு அறிக்கையை முன் வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் எம்.காளியப்பன் நிறைவு உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.வெள்ளையன், செயலாளராக வி.பி.கந்தசாமி, பொருளாளராக ஏ.தியாகராஜன் உள்ளிட்ட 9 மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஊழியர்களின் உரிமைக்கு உத்தரவாதமளிக்காத முத்தரப்பு ஒப்பந்தத்தை திரும்ப பெற்று நல அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதிபடுத்திட வேண்டும். மின் வாரியத்தை பிரிக்க பிறப்பித்த வாரிய உத்தரவு 6 மற்றும் 7, அதை அமலாக்க பிறப்பித்த அரசு உத்தரவு 32-ஐ திரும்பப் பெற வேண்டும். மருத்துவ செலவை மீளப் பெறுவதில் கால அவகாசம் ஏதும் நிர்ணயிக்கக் கூடாது. விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பரிசீலித்து மருத்துவ செலவுத் தொகையை வழங்கிட வேண்டும். ஜனவரி 2024 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். எம்ஏஆர் விதிகளின்படி வழங்கிட வேண்டிய மருத்துவ செலவுத் தொகையை உடனே வழங்க வேண்டும். குழப்பங்களை உருவாக்கும் இஆர்பி முறையை கைவிட்டு பழைய முறையிலேயே பணப் பட்டுவாடாக்களை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.