districts

திருச்சி முக்கிய செய்திகள்

சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு  பட்டுக்கோட்டை, பேராவூரணியில் சிறப்பு முகாம் 

தஞ்சாவூர், ஜன.4 -  சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:  சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்க ளுக்கு, நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர்   இனத்தைச் சார்ந்தவர்கள், 18  வயது  முதல் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  அமைப்பு சாரா  நிறுவனங்களில்  பணிபுரியாத  குடும்பத்தில் ஒருவர்  (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள் ளோர்) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.  பட்டுக்கோட்டை  வட்ட அலுவலகத்தில்  ஜனவரி 7 ஆம் தேதி (செவ்வாய்கிழமை)  அன்றும், பேராவூரணி வட்ட அலுவலகத்தில்  ஜனவரி 9 (வியாழக்கிழமை) அன்றும் காலை 10 மணிக்கும்    உறுப்பினர்கள் சேர்க்கை    முகாம் இரண்டு வட்ட அலுவலகங்களில்   நடத்தப்படவுள்ளது.    சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டை பூட்டி விட்டு  வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திடுக!  காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.4 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், ஆயுத அறை, காவல் நிலைய வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் அவசியம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த பிறகே செல்ல வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் காவல்துறை யினர் கண்காணிக்க வசதியாக இருக்கும். விலை உயர்ந்த  பொருட்கள், நகைகளை வீட்டில் தனியாக வைத்து விட்டு  செல்லக்கூடாது. வங்கி பாதுகாப்பு அறைகளில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அல்லது பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் கொடுத்து செல்ல வேண்டும்.  ஏலச்சீட்டு, குழுக்கடன், வெளிநாட்டு பணிக்கு அனுப்பு வது போன்ற விஷயங்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். குற்றச்செயல்களை தடுக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது, பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், காவ லர்கள் உடனிருந்தனர். 

பேராவூரணி,திருவாரூர் வழியாக இராமநாதபுரம்- தாம்பரம்  பொங்கல் சிறப்பு விரைவு ரயில்

தஞ்சாவூர், ஜன.4 -  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு (ஜனவரி 14,15,16) தெற்கு ரயில்வே சார்பில் இராமநாதபுரம் - தாம்பரம் - இராமநாதபுரம் (06 104/06103) வாரம் இரு முறை சிறப்பு விரைவு ரயில்  இயக்கப்பட உள்ளது.  இந்த  இராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் (06104 ) ஜனவரி 10 ,12 ,17 ஆகிய மூன்று நாட்களில் இராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு இரவு 7 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக சென்று தாம்பரத்தை சனி, திங்கள்கிழமைகளில்  அதிகாலை 03.30 மணிக்கு சென்றடையும். அதுபோல  மறுமார்க்கத்தில் தாம்பரம் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (06103) ஜனவரி 11,13,18  ஆகிய மூன்று நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட தடத்தின் வழியாக பட்டுக்கோட்டைக்கு நள்ளிரவு 12.33 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து இராமநாதபுரத்திற்கு ஞாயிறு, செவ்வாய்க்கிழமை காலை 5.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலில் மூன்றடுக்கு  குளிர்சாதன வசதி பெட்டிகள் -10, தூங்கும் வசதி பெட்டிகள் 7, மாற்றுத்திறனாளிகள் பெட்டி ஒன்று, பிரேக் வேன் ஒன்று ஆக மொத்தம் 19 எல்.எச்.பி கோச்சுக்களுடன் இயங்கும். இதற்கான முன்பதிவுகள் ஜனவரி 5 அன்று காலை 8 மணியிலிருந்து துவங்கி நடைபெறுகிறது . பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.