கரூர், ஏப்.10 - தமிழ்நாடு மாநில சமரச மைய அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக ஏப்.10 அன்று சமரச நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக சமரசம் பற்றிய விழிப்புணர்வு பேரணி, ஐந்து ரோட்டில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு, கரூர் மாரியம்மன் கோவில், ஜவஹர் பஜார் மற்றும் அரசமரத் தெரு வழியாக மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சமரசம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். கரூர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில், முதன்மை சார்பு நீதிபதி கனகராஜ், கூடுதல் சார்பு நீதிபதி ஆர்.கோகுல் முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.உமாமகேஸ்வரி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.