புதுக்கோட்டை, நவ.22 - புதுக்கோட்டையில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் நவ.15 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இக்கல்லூரியில் ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ, மாணவியர் விடுதி, ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரூ.5.10 கோடி மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நன்றி தெரிவித்தாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சுமதி கூறுகையில், “புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் பல் மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிகம் செலவாகும் என்பதால், சிகிச்சை பெறாமலேயே இருந்து வந்தோம். தற்போது எவ்வித கட்டணமுமின்றி பல் மருத்துவ சிகிச்சைகள் செய்து கொள்ள முடியும். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார். புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், “நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். தமிழ்நாட்டின் 3 ஆவது அரசு பல் மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியாக சேர்ந்துள்ளதைப் பெருமையாக கருதுகிறேன். இம்மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன உபகரணங்கள் இருப்பதால் நவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய பொதுமக்களும் உயர்தர சிகிச்சைகளை பெற வேண்டும் என்பதற்காக இக்கல்லூரியைத் திறந்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.